அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !
மிருகங்களும், பறவைகளும் மற்ற உயிர்களும் செய்யும் முறையீடும், விண்ணப்பமும்.
எல்லா உயிர்களுக்கும் பொதுக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
நீதிக்கடவுளே!
தேவரீர் பெருங்கருணையினால் விசேட அறிவு கொடுக்கப்பட்ட மனிதர்கள்
எங்களுக்குச் செய்யும்
கொடுமைகளை சொல்லி முடியாது. உணவிற்காக தினசரி கோடிக்கணக்கில் எங்களை
பதறப்பதற,துள்ளத்துள்ள, வெட்டி, அறுத்து, நசுக்கி இரக்கமில்லாமல்
கொள்ளுகிறார்கள். முன் ஜென்மத்தில் ஏற்கனவே
நாங்கள் உயிரைக் கொன்று இரக்கமில்லாமல் வாழ்ந்ததால் தான் இப்போது மனித
உடம்பிலிருந்து விடுபட்டு துன்பபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள்
இப்போது அடைந்து கொண்டிருக்கின்ற
துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எங்களுக்கு
செய்தாலும் அவர்கள்
எங்கள் ஆன்ம இனங்கள் என்ற உணர்வு வந்துவிடுகிறது.
எங்களுக்குச் செய்யும்
கொடுமையால் அவர்கள் கொடுமை, வறுமை,பிணி,துன்பம், கவலை , பூமி நடுக்கம்,
பெரும்புயல், யுத்தம்,
விஷசுரம்,பேரிடி, தீடீர் சாவு, திருட்டு, கொள்ளை, கொலை முதலியவைகளால்
துன்பப்பட்டு இறக்கின்றனர். அவர்களுக்கு இரக்க
சிந்தனை உண்டு பண்ணி அவர்களையும் எங்களையும் காத்தருள வேண்டும். தனக்கோ
தன்பிள்ளைக்கோ
தன் மனைவிக்கோ சுற்றத்திற்கோ ஆபத்து வரும்போது கவலைப்பட்டு கண்ணீர்
விட்டுக்கதறும் மனிதர்கள் எங்களை ஏன் இரக்கமில்லாமல் கொல்லுகிறார்கள்?
அவர்களுக்கு நாங்கள் என்ன கெடுதல்
செய்தோம்? இது தான் மனித நீதியா? உங்களைப் படைத்த கடவுள் தானே எங்களையும் படைத்தார்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று ஒருமை நடம்புரியும் ஒரே கடவுளே! ஒளியே!
எங்களுக்கு விசேட அறிவு இல்லாததால், எங்களுக்கு தேவரீரை வணங்க முடியவில்லை.
நினைக்க முடியவில்லை. பக்தி செய்ய முடியவில்லை. தொண்டு செய்ய
முடியவில்லை. ஆகவே எங்களையும்
மனித உடம்பில் வரவழைத்து தேவரீர் திருவடியை அடைய அருள் செயல் வேண்டும்.
மேலும் மனிதர்கள் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்து அவர்களுக்கு உண்மை
அறிவு, உண்மை இரக்கம், உண்மை அன்பு முதலிய நற்குணங்களை அளித்து இவ்வுலகையும் மற்ற உலகங்களையும் அறிவு உலகமாக,
அருள் உலகமாக, ஆனந்த உலகமாக மாற்றும்படி மிகவும் மன்றாடி கேட்டு கொள்கிறோம்.
குற்றமெல்லாம் குணமாகக் கொள்ளும் குணப்பெருங்குன்றே! எவ்வுயிர்க்கும் தாயே!
எங்கள் சார்பில் எங்களுக்காக மனிதர்களிடம் வாதாடுகின்றவர்களுக்கும் தேவரீரிடத்தில் விண்ணப்பித்துக்
கொள்பவருக்கும், கொல்லா விரதத்தை பரப்புகின்றவர்களுக்கும், எக்காலத்தும் எல்லா நன்மைகளும் பெறச்
செய்து மரணமிலாப் பெருவாழ்வில் அவர்களை வாழவைக்க வேண்டுகிறோம். மற்றவர்களையும் கொல்லா
விரதத்தை எடுக்க செய்து அவர்களையும் மரணத்திலிருந்து விடுவிக்க வேண்டும். சிற்றறிவால் செய்து
கொள்ளும் இச்சிறு விண்ணப்பத்தை திருச்செவிக்கு ஏற்பித்தருளல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!
இங்ஙனம் தங்கள் அருமைப் பிள்ளைகளாகிய,
மாடு ஆடு கோழி பன்றி மீன் மற்ற உயிர்வகைகள்
ஊன் உணவை விட்டாலன்றி இன்று பெருகி வரும் எந்த நோயையும் தீர்க்க முடியாது.
இது சத்தியம்! சத்தியம்!
No comments:
Post a Comment