Sunday, 21 August 2016

உலக குரு வள்ளலார் - 2



 
இந்திய ஞானபூமியிலே யுகம் யுகமாக அருளாளர்கள் ஞானிகள்
ரிஷிகள் மகான்கள் தோன்றி மக்களுக்கு வாழும் நெறியை
உபதேசித்து, முடிவில் மனித பிறவியின் இலட்சியமான இறைவனோடு
ஐக்கியமாகும் வழியையும் காட்டி, விழியிலே விளங்கும் விமலனை
உணர்த்தியும் சென்றனர்!

எங்கு சென்றனர்? எங்கிருந்து வந்தோமோ அங்கே! செல்வதற்கு முன்
பலர்தான் பெற்ற அனுபவத்தை புராணம் கதை என ஏடுகளில்
எழுதி பிற்கால சந்ததிகள் அறியட்டுமே உணரட்டுமே என விட்டுச்
சென்றனர்! ஒழுக்கம் பண்பு நீதிநெறி சத்தியம் அகிம்சை அன்பு
ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தினார்! மனிதன் மனிதனாக வாழ வழி காட்டினார்!

இன்று வரை இவ்வுலகில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும்
சொன்ன கருத்து இதுதான்! கடவுள் ஒருவரே! அவர் உருவமும்
அருவமும் இல்லா அருஉருவான ஒளியே! பேரொளியே!
பிரபஞ்சமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாயிருக்கும் ஒளியே!
எங்கும் நிறைந்தவன்! எல்லாம் வல்லவன்! எல்லாம் அவன் செயல்
ஆதியும் அந்தமும் அவனே! கடவுள் இறைவன் பரம்பொருள்
பரமாத்மா இன்னும் பலவிதமாக போற்றப்படுகிறான் அந்த ஒரே
கடவுளே!

எல்லாமுமான அந்த இறைவனே பஞ்ச பூதங்களாக, நிலம் நீர்
நெருப்பு காற்று ஆகாயம் என விளங்குகிறான்! சர்வமும் இதுவாகவே
உள்ளது! எல்லாமே பஞ்சபூத கூட்டுறவேயாகும் பஞ்சபூதத்திலும் பஞ்ச
பூதமுண்டு ! இதுவே அதிசயம்! ஒன்றுக்குள் ஒன்று அடக்கம்!

மனிதனும் பஞ்ச பூதத்தால் உருவானவனே! உடல் மண் அம்சம்,
இரத்தம் நீர் அம்சம், உயிர் நெருப்பம்சம், வாயுஅம்சம் சுவாசம்
உடலுக்குள் ஆகாச வெளியிலே இவையனைத்தும்!  உடல் எனும்
கூட்டை உருவாக்கிய அந்த மாயக் குயவனார், இறைவன் எவ்வளவு
தேர்ந்த திறமை சாலி ?! சற்று சிந்தியுங்கள்!

நம் உடல் நாம் விரும்பிய படியா வந்தது? நாம் எப்படி பிறந்தோம்?
ஏன் பிறந்தோம்? எங்கிருந்து பிறந்தோம்?நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுகமாக வளர்வது எப்படி? எப்படி வாழ்கிறோம்?
எதற்க்காக வாழ்கிறோம்? பலரும் இவையொன்றும் தெரியாமலே
இறந்து போகின்றனர்!?
       

உலக குரு வள்ளலார் - 1



உலக  குரு  வள்ளலார்

    குரு பூஜை கொண்டாடு !
உலக குரு  திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் சுபானுவருடம் புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஞாயிற்றுக்கிழமை (05-10-1823) பிறந்தார் ! உலகுக்கு வழி காட்ட ! ஒளி நெறி ஊட்ட ! நம்மை கடைத்தேற்றுவதற்கு !?
    
           இதுவரை இவ்வுலகில் எண்ணில்லா ஞானிகள் மகான்கள் சித்தர்கள் ரிஷிகள் யோகிகள் தவசீலர்கள் தோன்றி உலகருக்கு ஞான வழி காட்டியுள்ளனர் ! எந்த நாட்டில் தோன்றிய யாராயினும் மனிதகுலம் உய்ய அன்பு ஒன்றை தவிர வேறு எதுவும் கூறவில்லையே !?

           வாழையடி வாழையென வந்த அத்திருக்கூட்ட மரபில் வந்துதித்த ஞானி நம் வள்ளல் பெருமான் !வள்ளலாரிடம் உள்ள சிறப்பு யாதெனில் , இதுவரை இரகசியகமாக இருந்த ஞானத்தை , பலரும் பரிபாஷையாக மறைத்து சொல்லியதை எல்லோருக்கும் சொன்னார் வள்ளலார் !

            உலக மக்கள் மரணமிலா பெருவாழ்வு பெற கூவி அழைத்து "வள்ளலாரே உலக குரு !"

           உண்மை உணர்ந்து வள்ளலாரை நம் குறுவென ஏற்று , அவர் அவதார தினத்தை குருபூஜையாக உலகெங்கும் கொண்டாடுவோம் !

            மாதா பிதா பெற்ற நீவீர் குருவாக வள்ளலாரை கொண்டாடுக ! குருபூஜைசெய் ! குருவை போற்று ! ஞானம்  கிட்டும்!! மறவாதீர் ! புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்தரத்தன்று குருபூஜை !! உலக குருவின் ஜெயந்தி !!

வள்ளல் பெருமானின் அருளிச் செயல்கள்


    1.  பாடல்கள்                     : திருஅருட்பா - ஆறு திருமுறைகள்
    2.  பாடல்கள்                     : ஆறுதிருமுறைகளிலும் சேராதது
    3.  விண்ணப்பங்கள்      : இறைவனிடத்துச் செய்து கொண்டவை (உரைநடை )
    4.  கடிதங்கள்                    : தம் கைப்பட எழுதியவை
    5.  கட்டளைகள்              : தாம் நிறுவிய நிலையங்களின் நடைமுறைகள் பற்றி எழுதியவை
    6.  பத்திரிக்கைகள்        : சுற்றறிக்கைகளும் , அழைப்பிதழ்களும்
    7.  உபதேசங்கள்             : கூட இருந்தவர்களும் , கேட்டவர்களாலும் எழுதி வைக்கப்பட்டுள்ள குறிப்புகள்
    8.  உரைநடைநூல்கள் : 1. மனமுறை கண்ட வாசகம்
                                                       2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
    9.  உரைகள்                       : 1. தமிழ் என்ற சொல்லுக்கு எழுதிய உரை
                                                      2. பெரியபுராணம் முதல் பாடல் முதல் சொல் 'உலகெலாம் ' என்பதற்கு
                                                           வரைந்த விளக்கம்
                                                      3. ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
                                                      4. தொண்ட மண்டல சதகத்தின் நூற்பெயர் இலக்கணமும் கடவுள் வாழ்த்து
                                                          பாடலுக்கு செய்த உறையும்
                                                     5. பொன்வண்ணத் தந்தாதியின் 22-ஆம் பாடலுக்கு செய்த உரை
                                                     6. வேதாந்த தேசிகரின் குறட்பா ஒன்றுக்கு வரைந்த உரை
   10. பதிப்பித்த நூற்கள் : 1. ஒழிவிலொடுக்கம் - 1851
                                                     2. தொண்ட மண்டல சதகம் - 1855
                                                     3. சின்மய தீபிகை - 1857
   11. பிற                                : பிறரது நூல்களுக்கும் பதிப்புகளுக்கும் வழங்கிய சாற்றுக்கவிகள் மருந்துச் சரக்குகளின் குண அட்டவணை

வள்ளல் பெருமானின் தனிப்பெரும் அருட்பணிகள்

    1. சமுதாயத்திலும் மதத்திலும் வேறூன்றிவிட்ட கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக அரும்பாடு பட்டார்கள் .
    2. முதல்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள் .
    3. முதன்முதலில் முதியோர் கல்வியை ஏற்படுத்தினார்கள் .
    4. முதன்முதலில் தமிழ் ஆங்கிலம் இந்தி என மும்மொழி பாட சாலையை உருவாக்கினார்கள் .
    5. தமது கொள்கைக்கென்று தனி ஒரு மார்க்கம் கண்டார் . " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ".
    6. தமது மார்கத்திற்க்கென்று தனிக்கொடி கண்டார் . " சன்மார்க்க கொடி " மேல் ஒருபகுதி மஞ்சள்        கீழ் இப்பகுதி வெள்ளை .
    7. தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் .
    8. எவ்விதபேதமுமின்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கிட "சமரச சுத்த சன்மார்க்க சத்திய         தருமச்சாலை " ஏற்படுத்தினார் .
    9. சடங்குகள் ஏதுமின்றி இறைவனை ஜோதி வடிவில் வழிபட சமரச சுத்த சன்மார்க்க சத்திய         ஞானசபை நிறுவினார் .
   10. வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு நெறிக்கு மேல் ஒரு நெறி இல்லை .
   11. " அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி"
      என்று வள்ளல்பெருமானார் அருளிய மகாமந்திரத்திற்கு மேலான மந்திரம் ஒன்றும் இல்லை .
   12. சன்மார்க்க நெறியை உரைத்ததோடு அல்லாமல் அதன்படி வாழ்ந்துகாட்டினார்கள் . அதன்  பயனாக அருட்பெருஞ்ஜோதி ஆனவர் நம் வள்ளல் பெருமான் ஆவார் .